பாடப்புத்தகங்கள் அச்சிடல் செலவு கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, February 24th, 2023

பாடசாலை பாடப்புத்தகங்களை மூன்று மொழிகளில் அச்சிடுவதற்கான செலவு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதன் விநியோகம் எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதி நிறைவடையும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மாகாண மற்றும் வலய பாடசாலைகளுக்கான பாடசாலை சீருடை துணி விநியோகத்தை நேற்று ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வருடங்களில் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 450 கோடி ரூபா செலவிடப்பட்டது, ஆனால் இந்த வருடம் அதற்கான செலவு 1600 கோடி ரூபா வரை அதிகரித்துள்ளது.

அரசாங்கத்திடம் பணம் இல்லாவிட்டாலும், மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படாமல் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பாடப்புத்தக விநியோகம் ஏற்கனவே தொடங்கிவிட்டது, அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை ஏற்கனவே அச்சிடப்பட்டவைகளாகும்.

மிகுதி புத்தகங்களை அச்சிட்டுமுடித்த பின்னர், நாடு முழுவதும் உள்ள 48 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மார்ச் 27 ஆம் திகதிக்குள் விநியோகித்து முடிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை பாடப்புத்தகத் தேவையில் 45% அரசாங்க அச்சக திணைக்களம் இந்தியக் கடன் உதவியுடன் மூலப் பொருட்களைக் கொள்முதல் செய்துடன் மீதமுள்ள 55 சதவீதத்தின் அச்சிடலுக்காக 22 தனியார் அச்சகங்கள் பங்களிப்பு செய்துள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: