பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்த விரைவில் புதிய சட்டம்!

Thursday, December 27th, 2018

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கான திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ளவுள்ளதாக உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததன் பின்னர், நியமிக்கப்பட்ட மீளாய்வு குழுவின் அறிக்கை தற்போதுவரை கிடைக்கப்பெறாத காரணத்தினால், மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வருகிறது.

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ முதலான ஆறு மாகாண சபைகளின் அதிகாரகாலம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அந்த மாகாணங்களின் நிர்வாகம் ஆளுநர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேநேரம், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 10 திகதி தென் மாகாண சபையினதும், ஏப்ரல் 21ஆம் திகதி மேல் மாகாண சபையினதும்;, செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி ஊவா மாகாண சபையினதும் அதிகார காலம் நிறைவடைய உள்ளது.

எனவே, பழைய முறைமையில் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பழைய முறைமையில் தேர்தலை நடத்தும் நோக்கில், பிரதமருடன் கலந்துரையாடி புதிய சட்டத்தை கொண்டுவர முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts: