பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ரவுடிக் கும்பல் அட்டகாசம் : ஒருவர் ஆபத்தான நிலையில் – பாதுகாப்பு கோரி ஊழியர்கள் போராட்டம்!

Monday, July 15th, 2019

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் அத்துமீறி உள்நுழைந்த கும்பல் ஒன்று, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை கடுமையாக தாக்கியதில் அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. ரௌடிக்கும்பலை தடுக்க முற்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டனர். தாக்குதலை தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து, வைத்தியசாலை பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி, வைத்தியசாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது – வடமராட்சியின் துன்னாலை பகுதியில் இடம்பெற்ற தகராறொன்றில் காயமடைந்த ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் நேற்றிரவு 7.20 மணியளவில் வைத்தியசாலையின் பின் மதில் மேலாக ஏறி குதித்து உள்ளே வந்த கும்பல் ஒன்று, ஆண்கள் விடுதிக்குள் நுழைந்தது.

அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. வைத்தியசாலை ஊழியர்கள் அதை தடுக்க முற்பட்டபோது, அவர்கள் அச்சுறுத்தப்பட்டனர். உடனடியாக வைத்தியசாலை பொலிசாருக்கு அறிவிக்கப்பட, அவர்கள் வந்து தாக்குதலை தடுக்க முற்பட்டனர். பொலிசார் மீதும் ரௌடிகள் தாக்குதல் நடத்தினர். ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் நிலத்தில் வீழ்த்தி தாக்கப்பட்டார்.

தாக்குதலிற்கு இலக்கான நோயாளி, தலையில் பலத்த அடிபட்டு ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், இன்று காலை 10 மணியிலிருந்து வைத்தியசாலை பணியாளர்கள், தாதியர்கள், வைத்தியர்கள் அனைவரும் வைத்தியசாலையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய பொலிசாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தி வைத்தியசாலையினதும், நோயாளர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: