பரவல்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டே மீண்டுமொரு முடக்கம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி!

Thursday, April 22nd, 2021

கோவிட் தொற்றின் அதிகளவான பரவல்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டே மீண்டுமொரு முடக்கம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என கோவிட் – 19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இந்த புத்தாண்டு காலமானது மக்களுக்கு சிறந்த விடுவிப்பாக காணப்பட்டதாகவும், கடந்த சில நாட்களாக பதிவு செய்யப்படுகின்ற கோவிட் தொற்று புத்தாண்டு காலத்துடன் தொடர்புபட்டவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த வருடம் நாடு முடக்கப்பட்டிருந்தமையால் புத்தாண்டை கொண்டாட முடியவில்லை. ஆனால் இந்தப் பத்தாண்டில் மக்கள் அதனை மனதில் கொண்டு செயற்படவில்லை. பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை கவனத்தில் கொள்ளாமல் செயற்பட்டமையின் விளைவாகவே தற்போது தொற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே கோவிட் தொற்றின் மாறுபட்ட புதிய வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸானது வெளிநாடுகளிலிருந்து தொற்றியதா அல்லது இலங்கையிலேயே இந்த மாற்றங்கள் நிகழ்ந்தனவா என்பது தொடர்பில் தெரியவில்லை.

இலங்கையில் அதிகமான இளையவர்கள் கோவிட் தொற்றினால் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றமைக்கு இந்த புதிய வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம்.

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மீண்டும் பொதுமக்களிடம் விழிப்புணவர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த சில நாட்களாக இலங்கையில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அதேநேரம் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நேற்றுமுன்தினம் ஒரு கோவிட் வைரஸ் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: