பம்பலப்பிட்டி இளம் வர்த்தகர் கொலை : ஐந்து பேர் வெளிநாடு செல்லத் தடை !

Thursday, August 25th, 2016

பம்பலப்பிட்டி பகுதியில் கடத்தப்பட்டு மாவனல்ல பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல வர்த்தகரின் சடலத்தில், மர்ம உறுப்பு பகுதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த வர்த்தகர் கப்பம் கோருவதற்கு முன்னரே கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட வர்த்தகரின் சடலத்தில் முகத்தில் அடையாளம் தெரியாதளவிற்கு வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன. மேலும் சடலம் எரிக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்படுவதோடு சடலம் அழுகிய நிலையிலும் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வர்த்தகரின் மர்ம உறுப்பு பகுதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு குறித்த சேதம் சந்தேக நபர்களால் ஏற்படுத்தப்பட்டதா அல்லது  சடலம்  மிருகங்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து நபர்களுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் தடை விதித்துள்ளார். குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த உத்தரவை நீதிமற்றம் பிறப்பித்துள்ளது.

வர்த்தகரின் சடலம் நேற்று இரவு,  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொரிஸார் தெரிவித்துள்ளனர்.  மாவனல்ல பகுதியில் அடையாளம் காணமுடியாத இளைஞர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வர்த்தகரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டதுடன், குற்றப் புலனாய்வு பொலிஸார் குடும்பத்தாருடன் மாவனல்ல பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.இதையடுத்து இரவு 10 மணியளவில் அங்கு காணப்பட்ட சடலம் கடத்தப்பட்ட வர்த்தகருடையது என அவருடைய குடும்பத்தார் அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சடலம் பிரேத பரிசோதனைக்காக மாவனல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கடத்தல் தொடர்பில் 7 விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: