பம்பலபிட்டி வர்த்தகர் படுகொலை: 36 மணித்தியாலங்களுக்குள் சந்தேக நபர்கள் கைதாகலாம்!

Saturday, August 27th, 2016

சில தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி பகுதியின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் படுகொலை தொடர்பில் சந்தேகத்துக்குரியவர்களாக பெயரிடப்பட்டு கடவுச் சீட்டு முடக்கப்பட்ட ஐவரிடமும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் (சி.சி.டி) சிறப்பு பொலிஸ் குழு விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

நீண்ட நேரம் முன்னெடுக்கப்பட்ட இந்த விசாரணைகளில் சகீபுடன் அவர்களுக்கு இருந்த தொடர்பு மற்றும் கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் மற்றும்  குடும்பப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விசாரணை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் வாக்கு மூலங்களும் பெறப்பட்டதாக குற்றத் தடுப்புப் பிரிவின் தகவல்கள் வீரகேசரி இணையத்தளத்துக்கு தெரிவித்தன.

இதனைவிட வர்த்தகர் சகீபின் படுகொலைக்கு முன்னர் அவரை கடத்திச் செல்ல சிறிய ரக கார் ஒன்று வந்துள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளன. பொலிஸார் நேற்று நண்பகல் ஆகும் போதும் 10 இற்கும் மேற்பட்ட தனியார் சி.சி.ரி.வி. காட்சிப் பதிவுகளை விசாரணைகளுக்காக பெற்றிருந்த நிலையிலேயெ    குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

விசாரணைகளுக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 12 பொலிஸ் குழுக்களில் மூன்று குழுக்கள் தலைநகரின் பிரதான இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமராக்களை ஆராயும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.  அதன்படி கொள்ளுபிட்டி, தும்முல்ல சந்தி, பௌத்தாலோக்க மாவத்தை, பொரளை, ஒருகொடவத்தை, களனி வரையிலான அனைத்து சி.சி.ரி.வி. காட்சிகளும் இந்த சிறப்பு ஆய்வுக் குழுவினரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இதனை விட மாவனல்லை பகுதியில் விசாரணைகளுக்கு அனுப்பட்டிருந்த குற்றத் தடுப்புப் பிரி்வின் பொலிஸ் பரிசோதகர் ரணசிங்கவின் கீழான இரு பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக நேற்று அங்கு மற்றொரு பொலிஸ் குழுவும் அனுப்பட்டுள்ளது. அதன்படி மாவனெல்லை பகுதிக்கு அனுப்பட்ட பொலிஸ் குழுக்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் 24 அல்லது 36 மணித்தியாலங்களுக்குள் சந்தேக நபர்களை கைது செய்ய முடியுமாக இருக்கும் என நம்புவதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று மாலை வரை பொலிஸார் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் பல தக­வல்கள் வெளிப்படுத்­திக்­கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில் சந்­தே­கிக்­கத்­தக்க ஐவர் தொடர்­பிலும் 10 தொலை­பேசி இலக்­கங்கள் குறித்தும் விஷேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இது குறித்து நேற்று  முன்தினம் கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் அறிக்கை சமர்ப்­பித்த பம்­ப­ல­பிட்டி பொலிஸார், சந்­தே­கிக்­கத்­தக்க ஐந்து பேர் வெளி­நாடு செல்­வதை தடுக்கும் வித­மாக தற்­கா­லிக தடை உத்­த­ரவைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

2016.08.21 அன்று கடத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட நிலையில் மாவ­னெல்லை பகு­தியில் சடல­மாக மீட்­கப்­பட்ட மொஹம்மட் சகீப் சுலை­மானின் படு­கொலை தொடர்பில் முன்னெடுத்துள்ள விசா­ர­ணை­களில் சந்­தேக நபர்கள் என கருதி ஐவ­ருக்கு எதி­ராக விசாரணைகள் முன்­னெ­டுக்கும் நிலையில் அவர்கள் வெளி நாட்­டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்­டுள்­ள­தாக பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லுக்கு அமை­வா­கவே இந்த தடை உத்­த­ரவு பெறப்­பட்­டுள்­ளன.

Related posts:

தமிழர் அரசியல் உரிமைப்போராட்டத்தை சரியான வழியில் நகர்த்தியவர் டக்ளஸ் தேவானந்தா - ஈ.பி.டி.பியின் ஜேர்...
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்து...
புதிய வரிக் கொள்கைகள் தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வை அதிகரிக்கின்றன - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் ...