பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் சாதாரண விலையில்!

Wednesday, December 12th, 2018

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்பட இடமளிக்க வேண்டாமெனவும் விலை அதிகரிப்பு ஏற்படாது நியாயமான விலையில் உணவுப் பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பண்டிகைக் காலத்தின் போதான வாழ்க்கைச் செலவு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சுக்களின் செயலாளர்கள், நிதி அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஜனாதிபதியினால் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

சந்தையில் அசாதாரண விலை அதிகரிப்பு ஏற்பட இடமளிக்காது, விலை கட்டுப்பாடு முறையினை நடைமுறைப்படுத்தி தொடர்ச்சியாக சந்தை விலை தொடர்பில் கவனம் செலுத்துமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு இதன்போது பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, சந்தை விலைச் சுட்டி தொடர்பில் தொடர்ச்சியாக நுகர்வோரை அறிவுறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

மேலும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சதொச நிலையங்களினூடாக சலுகை விலையில் அத்தியாவசிய உணவு பொருட்களை பெற்றுக்கொடுத்து நுகர்வோருக்கு உயர்ந்தபட்ச சலுகை வழங்குவதற்கான நடவடிக்கை தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சந்தையில் பெற்றோலியப் பொருட்களின் விலை குறைவினால் கிடைக்கும் நன்மைகளும் நுகர்வோரை சென்றடைவதற்கான நடைமுறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Related posts: