நேற்றும் புதிய நோய்த்தொற்று இல்லை: கொரோனா தொடர்பில் இலங்கையின் நிலை!

Saturday, April 11th, 2020

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையில் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

‘வைத்தியசாலைகளில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட இன்று எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை.’ என இது குறித்து தகவல்களை உறுதிப்படுத்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந் நிலையில் இதுவரை இலங்கையில் 190 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், நேற்றும் 5 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அதன்படி இலங்கையில் தொற்றுக்குள்ளானோரில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 55 பேர் குண்மடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 129 பேர் மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

அவர்களில் 83 பேர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும் 27 பேர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும் 17 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைவிட 32 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 224 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோருடன் நெருங்கி செயற்பட்டவர்கள் சுய தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், பல பகுதிகளில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாக இருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் இன்றையதினம் இவ்வாறான 23 பேர் ஜா-எலயில் இருந்து கடற்படையின் ஒலுவில் தனிமைபப்டுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறிய கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா புத்தளம் பகுதியிலும் அத்தகைய சம்பவங்கள் பதிவானதாக கூறினார்.

அதன்படி புத்தளத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 59 பேர் இன்று இராணுவத்தின் கட்டுகெலிய தனிமைபப்டுத்தல் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் கடந்த 8 ஆம் திகதி முழுமையாக முடக்கப்பட்டுள்ள மன்னார்- தாராபுரம் கிராமத்தில் கிருமி நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அங்கு 464 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், இரண்டு குடும்பங்கள் புத்தளத்தில் இருந்து வந்த கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணியதால் அந்தப் பகுதி முற்றாக முடக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேரிடம் கொரோனா தொற்று பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. அத்துடன் பரிசோதனை மாதிரிகள் மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பாளரால் நேரடியாக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

இந் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும் நாட்டினை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் 12 யோசனைகளை முன்வைத்துள்ளது.

அபாய வலயங்கள் தொடர்பில் ஆய்வு செய்து, ஏனைய பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது அல்லது இலகுபடுத்துவது ஏற்புடையது என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இதனை நடைமுறைப்படுத்தும் போது சமூக இடைவெளியைப் பேணுவது முக்கியமானது எனவும் சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பேருந்துகளின் ஆசனங்களில் 50 வீதத்திற்கு மக்களை வரையறுத்து போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு அந்த சங்கம் அரசாங்கத்தை கோரியுள்ளது.

Related posts: