நேட்டோவில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயற்பட்டதால் போர் மூண்டது – உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை – ரஷ்யா தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022

உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை, உக்ரைனுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர தாம் விரும்புவதாக ரஷ்ய தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அவசர கூட்டத்தில் ரஷ்ய பிரதிநிதி ஒருவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும், நேட்டோ அமைப்பில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயற்பட்டதால் போர் மூண்டது என்றும் குறித்த பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான போருக்கு காரணம் இவ்வாறான செயற்பாடுகளே என வெளிப்படையாக கூறியுள்ளார். உக்ரைனும், ஜோர்ஜியாவும் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன.

ரஷ்யாவின் நலனை காக்கவே உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்டதாக ரஷ்ய தரப்பு கூறியுள்ளது.

இதேவேளை ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை, எந்த உடன்பாடும் எட்டப்படாமலேயே நிறைவுக்கு வந்துள்ளது.

உக்ரைன்- பெலாரஸ் எல்லையில் உள்ள கோமல் நகரில் இந்த பேச்சுவார்த்தை நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இருநாடுகளை சேர்ந்த உயர்மட்ட தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு இராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யா தரப்புக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது.

சண்டையை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.

பேச்சுவார்த்தைகள் ஐந்து மணி நேரம் நீடித்ததாக ரஷ்ய ஜனாதிபதி புடினின் உதவியாளரும் அந்நாட்டு தூதுக்குழு தலைவருமான விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்தார்.

இரு நாடுகள் தரப்பில் எடுக்க வேண்டிய பொதுவான நிலைப்பாடுகள் குறித்த சில நடவடிக்கைகள் இந்த பேச்சுவார்த்தையின் போது கண்டறியப்பட்டதாகவும், அடுத்து வரும் நாட்களில் பேச்சுவார்த்தையை தொடர இரு தரப்பும் ஒப்புக் கொண்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில் இரு நாடுகள் இடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை போலாந்து – பெலாரஸ் எல்லையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: