நீரிழிவு நோயாளர் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு – யாழ் போதனா வைத்தியசாலையின் துறைசார் வைத்திய அதிகாரி அரவிந்தன் எச்சரிக்கை!

Monday, November 15th, 2021

யாழ்ப்பாண மாவட்டத்தில்  நீரிழிவு தொற்றுக்குள்ளாகுவோரின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையம் பொறுப்பு வைத்திய அதிகாரி ம அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை முகாமினை ஆரம்பித்து வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தைப் பொருத்தவரை தற்போது நீரிழிவு நோய் என்பது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது குறிப்பாக இளவயதினர் மத்தியில் இந்த நீரிழிவு நோயானது அதிகமாக காணப்படுகின்றது. இந்த நோயால் எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது

குறிப்பாக இந்த நீரிழிவு நோய் தொற்றுக்கு உள்ளாகுவோருக்கு ஏனைய பல தொற்றுநோய்களும் ஏற்படுவதற்கான சான்றுகள் உள்ளன.  குறிப்பாக பாரிசவாதம் மற்றும் ஏனைய பல தொற்று நோய்கள் ஏற்படகூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

எனவே இளவயதினர் குறித்த நீரிழிவு நோய் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் அல்லது தகுந்தவேளைகளில் நீரிழிவு பரிசோதனையை மேற்கொண்டு ஆரம்பத்தில் இந்த நீரிழிவு நோயினை இனங்காணும் பட்சத்தில் அந்த நோயை குணமாக்க முடியும்.

எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவுநோய் தொடர்பில் பொதுமக்கள் சற்று அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நீரிழிவு கழகம் யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுத்தும் நீரிழிவு  சிகிச்சை முகாம் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது

யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெறும்  நீரிழிவு சிகிச்சை முகாமினை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் ஆகியோர் ஆரம்பித்து வைத்ததோடு யாழ் நீரிழிவு கழகத்தின் தலைவர் மைக்கல், செயலாளர் கணபதி மற்றும் நீரிழிவு கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததுடன் குறித்த நீரிழிவு சிகிச்சை முகாமில் அதிகளவான பொதுமக்கள் நீரிழிவு பரிசோதனையினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: