நாட்டை பசுமை பொருளாதார சமூகமாக மாற்றுவதற்கான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் உருவாக்கம்!

Tuesday, May 11th, 2021

நாட்டை பசுமை பொருளாதார சமூகமாக மாற்றுவதற்கான ஜனாதிபதி செயலணி ஒன்று  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்திற்கான நிலையான தீர்வுடன் பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி என இந்த செயலணிக்கு பெயரிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியான பசில் ராஜபக்ஸவின் தலைமையில் இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள் ஐவரும் ஆளுநர் ஒருவரும் இராஜாங்க அமைச்சர்கள் 14 பேரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக 46 பேர் இந்த செயலணியில் அங்கம் வகிக்கின்றனர்.

காலநிலை மாற்றத்திற்கான நிலையான தீர்வுடன் பசுமையான பொருளாதார சமூகமாக இலங்கையை உருவாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் கடந்த 27 ஆம் திகதி அமைச்சரவையில் பத்திரமொன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.

சூழலுக்கு பொருந்தக்கூடிய பொருளாதார சமூகத்தை கொண்ட நாட்டிற்காக, மக்களை ஒன்றுதிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கி இந்த புதிய செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

சுற்றாடலை பாதுகாப்பதற்காக மேலும் 24 விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி செயலணி கவனம் செலுத்தவுள்ளது.

அதற்கமைய, விவசாய நடவடிக்கைகளின் போது இரசாயன உரப் பயன்பாடு, கிருமிநாசினிகள் ஆகியவற்றிற்கு பதிலாக இயற்கை கிருமிநாசினிகள், உரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாய திட்டத்திற்கு விவசாயிகளை மாற்றுவதும் அதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதும் இந்த ஜனாதிபதி செயலணியின் பிரதான கடமையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: