நிதி நிறுவனங்களிடமிருந்து ஏழை மக்கள் பெற்றுக்கொண்ட கடன்களை இரத்து செய்வது பற்றி  ஆலோசனை!

Saturday, June 2nd, 2018

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நிதி நிறுவனங்களிடமிருந்து மக்கள் பெற்றுக்கொண்ட கடன்களை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சமுர்த்தி வங்கி “ஹரசர” கடன்வழங்கும் திட்டத்தின் நிகழ்வில் கலந்த கொண்டு உரையாற்றும்போது அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் சமுர்த்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் கூட அதன் நோக்கம் இன்னமும் நிறைவேறாமலே உள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் இலங்கை மிகக்குறைந்த வறுமை கோட்டின் வீதத்தை கொண்டிருப்பதில் பெருமையடைகின்றது.

கடந்த 2012, இல் 7 சதவீதமாகக் காணப்பட்ட வறுமை வீதம் இந்த வருடம் 4.1 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது இத்தகைய அடைவுகளுக்கும் சமுர்த்தி வேலைத்திட்டம் பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் உடன்படிக்கைகளுக்கு இணங்க அரசாங்கம் வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் மங்கள சமரவீர சமுர்த்தி வங்கியின் சுயாதீன கணக்காய்வு கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், சமுர்த்தி வங்கியை கண்காணிப்பதற்கு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசு  முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts: