நாளை பிற்பகல் 2 மணிவரை அவகாசம்: இல்லையேல் பணியிலிருந்து விலகியதாக கருதப்படுவர்!

Wednesday, December 14th, 2016

நாளைய தினம் (15.12.2016) பி.ப 2.00 மணிக்கு முன்னர் மாகம்புர துறைமுக முகாமைத்துவ நிறுவனம் அனைத்து ஊழியர்களும் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென்று அறிவித்துள்ளது.  இல்லையேல்  ஊழியர்கள் சுயவிருப்பின் பேரில் பணியிலிருந்து விலகியிருப்பதாக கருதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களை அறிவூட்டும் ஊடகவியலாளர் மாநாடு இன்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் , துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்றது.

இவ்வூடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, அமைச்சரவை தீர்மானத்திற்கமைவாகவே இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் மாகம்புர துறைமுக முகாமைத்துவ தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களாவர். கடந்த சில நாட்களாக அத்துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்ட நாசகார செயற்பாடுகள் காரணமாக தற்பொழுது நாம் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளோம்.

கப்பற் செயற்பாடுகளிற்கு தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முகாமைத்துவ கட்டிடத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், சி.சி.டி.வி கமராக்கள் தேசப்படுத்தப்பட்டுள்ளன. நீர் தாங்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் கப்பல்களின் செயற்பாடுகளிற்கு தொடர்ச்சியாக தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதனை காட்டிலும் மிக முக்கியமான விடயம் யாதெனில், கப்பல்களை எதேச்சாதிகாரமான முறையில் தரித்து வைப்பதாகும்.

இச்செயன்முறையினை கடற்கொள்ளையாகவே சர்வதேச சமூகம் கருதுகின்றது. இதன் காரணமாக இன்று அம்பாந்தோட்டை துறைமுகம் பாதுகாப்பு குறைந்த துறைமுகமாகவே சர்வதேச துறைமுகம் கருதுகின்றது. நாடென்ற ரீதியில் இது பாரிய நெருக்கடி நிலையாகும்.

எனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கும் நோக்குடன் அரசாங்கம் என்ற வகையில் ஒரு சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளோம். அதனடிப்படையில் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் பணிக்கு திரும்புமாறு அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பணிக்கு திரும்பாத ஊழியர்களின் வெற்றிடங்களின் பொருட்டு அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மிரிஜ்ஜவில கிராமத்திலிருந்து புதிதாக ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.  இவ்வாறான நாசகார வேலைகளில் ஈடுபட்ட அனைவருக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டள்ளார்.

Related posts: