நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் மீண்டும் நாடு திரும்புகின்றனர் – மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் – சுகாதார அமைச்சு நம்பிக்கை!

Wednesday, March 13th, 2024

நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் தற்போது மீண்டும் நாடு திரும்புவதால், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருத்துவ சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி. விஜேசூரிய, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

விசேட வைத்தியர்கள் மற்றும் தாதிகள் உட்பட பல வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதையடுத்து இலங்கையில் அண்மையில் வைத்தியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக சுகாதாரப் பணியாளர்கள் நாட்டை விட்டு அதிகளவில் வெளியேறினர்.

இந்நிலையில், நாட்டை விட்டு சென்ற விசேட வைத்தியர்கள் உட்பட பல வைத்தியர்கள் தற்போது இலங்கைக்கு திரும்பி வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறும் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளதாக டொக்டர் விஜேசூரிய தெரிவித்தார், பல வைத்தியர்கள் தமது விடுமுறைகளை இரத்து செய்துவிட்டு இலங்கைக்குத் திரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இலங்கைக்குத் திரும்பும் வைத்தியர்கள் மூலம், தேவையான வைத்தியசாலைகளுக்கு விசேட வைத்தியர்களை நியமிக்க சுகாதார அமைச்சினால் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

சுகாதாரப் பணியாளர்கள் நாடு திரும்புவதன் மூலம் இலங்கையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும் என விஜேசூரிய நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: