நாட்டின் மிகப்பெரிய சிமெந்துத் தொழிற்சாலை உதயம் – புதிய உருக்குத் தொழிற்சாலைக்கும் இலங்கையின் அரச தலைவர்களால் அடிக்கல் நாட்டிவைப்பு!

Tuesday, March 8th, 2022

மாகம்புர லங்கா கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட எமது நாட்டின் மிகப்பெரிய சிமெந்து தொழிற்சாலையான “லங்வா சங்ஸ்தா சிமென்ட் கோப்பரேஷன் (பிரைவெட்) லிமிடெட்” நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அத்துடன் அங்கு நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய உருக்குத் தொழிற்சாலைக்கான அடிக்கற்களையும் நாட்டி வைத்திருந்தனர்.

250 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் புதிய உருக்கு ஆலைக்கான முதலீடு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இதன் உற்பத்திச் செயல்முறை 2024 இன் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய சிமெந்து தொழிற்சாலையை திறந்து வைத்த பின்னர் – பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்ததுடன் தொழிற்சாலை வளாகத்தையும் பார்வையிட்டிருந்தனர்.

2020 மார்ச் மாதம் நிர்மாணப் பணிகளைத் தொடங்கிய சிமெந்து தொழிற்சாலைக்கான முதலீடு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இது, 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதுடன், நவீன வசதிகளைக் கொண்ட இந்த தொழிற்சாலை, தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய சிமெந்து தொழிற்சாலைகளில் ஒன்றாகும்.

இந்த தொழிற்சாலையின் வருடாந்த உற்பத்திக் கொள்ளளவு 04 மில்லியன் மெட்ரிக் தொன்கள் எனவும், முதற்கட்டமாக 2.8 மில்லியன் மெட்ரிக் தொன்களை உள்நாட்டுச் சந்தைக்கு நிறுவனம் வழங்கும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கன்வேயர் பெல்ட்கள் (Coovered Conveyer Belt) அதிக திறன், வீண்விரயம் மற்றும் சூழல் மாசடைவதைக் குறைக்க துறைமுகத்திற்கும் தொழிற்சாலைக்கும் இடையே மூலப்பொருளைக் கொண்டு செல்லப் பயன்படுகிறது.

மேலும் ஒரு முழுமையான தானியங்கி ஸ்டேக்கர் ரீக்ளைமர் யார்ட் (Stacker Reclaimer Yard) மற்றும் பிரிஜ் டைப் சிப் அன்லோடர் (Bridge Type Ship Unloaders) இரண்டையும் தொழிற்சாலை கொண்டுள்ளது.

சர்வதேசப் போக்குகளுக்கு ஏற்ப மனிதவலுவுக்குப் பதிலாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொருட்களைக் கையாள இது உதவும்.

லங்வா சங்ஸ்தா சிமெந்து தொழிற்சாலையானது சாதாரண போர்ட்லேண்ட், போர்ட்லேண்ட் கொம்பசிட் மற்றும் பிலென்டட் ஹைட்ராலிக்ஸ் உள்ளிட்ட அனைத்து வகையான சிமெந்துகளையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய லங்வா சங்ஸ்தா சீமெந்து தனியார் நிறுவனத்தின் தலைவர் நந்தன லொகுவிதான – தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டதன் பின்னர், எமது நாட்டின் சிமெந்து தேவையை உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டே நிறைவு செய்துகொள்ள முடியும் என்பதைக் குறிப்பிட்டார்.

இதன்போது வரட்சி மிக்க வலயமாக இருந்த ஹம்பாந்தோட்டை, 5 ஆவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் நீண்டகால திட்டங்களின் மூலம் முற்றாக மாற்றமடைந்துள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் பிரதிபலனாக – பிரதேச இளைஞர்கள் எதிர்கால எதிர்பார்ப்புடன் செயற்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க அதிகாரிகள், முதலீட்டாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தெற்காசியாவில் மிகவும் பலவீனமான பொருளாதாரத்துடன் ஏற்றுக்கொண்ட நாட்டை, சகல சவால்களுக்கும் முகங்கொடுத்து முன்னோக்கி கொண்டு சென்று நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பொறுப்பு எமது அரசாங்கத்திற்கு உள்ளது என இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக தெரிவித்தார்.

நாட்டில் இதுவரை 14 முதலீட்டு வலயங்கள் உள்ளன. 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் 11 புதிய முதலீட்டு வலயங்களை நிறுவ அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அவற்றின் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்தி, உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியுமென டி. வி. சானக மேலும் தெரிவித்தார்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் லங்வா நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: