நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, July 8th, 2021

எமது மரபுரிமையை இன்றுவரை பாதுகாக்க முடிந்தமையாலேயே உலகத்தின் பார்வையில் நாம் ஒரு பெருமைமிக்க தேசமாக உயர முடிந்தது என்று நம்புவதாக தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதனால் எமது தேசத்தை எண்ணிப் மிகவும் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 131 ஆவது தேசிய தொல்பொருள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் – ,

எமது நாட்டின் அந்த பண்டைய மரபுரிமையை வெளிக்கொணர்ந்து அவற்றை பாதுகாப்பது தொல்பொருள் திணைக்களமாகும். அவர்கள் அதற்காக பல்வேறு அர்ப்பணிப்புகளை மேற்கொள்கின்றனர். அந்த மரபுரிமைகளை பாதுகாப்பதுடன் அது தொடர்பில் மக்களுக்கும் தெளிவுபடுத்துகின்றனர்.

1890 ஆம் ஆண்டு இது போன்றதொரு நாளிலேயே இத்திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில் இத்திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 131 ஆண்டுகளாகின்றன. முழு உலகமும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தருணம் என்பதை நாம் அறிவோம். அந்த சவாலை வெற்றிக்கொள்வதற்கு ஒரு தேசமாக நாம் போராடி வருகின்றோம். நாட்டிற்கு எத்தகைய சவால்கள் ஏற்படினும் அதனை எதிர்கொள்வதற்கு எமது முன்னோர்கள் விட்டுச்சென்ற மரபுரிமைகள் எமக்கு ஒரு பலமாக இருக்கும்.

இன்று இவ்வாறானதொரு தொற்று நிலை இல்லாதிருப்பின் ஆண்டுக்கு இலட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் எமது நாட்டின் அழகையும், பண்டைய மரபுரிமைகளையும் பார்வையிட இலங்கைக்கு வந்திருப்பார்கள்.

அதேநேரம் கிழக்கு மாகாணம் என்பது பல தொல்பொருள் தளங்களை கொண்ட இடமாகும். சேருவில, முஹுது மஹா விகாரை, கிரிகடுசேய, லங்காபடுன, கோணேஸ்வரம் போன்ற வரலாற்று இடங்கள் பல அங்குள்ளன.

ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அந்த இடங்கள் நீண்ட காலமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. சில சமயங்களில், நாட்டை ஆட்சி செய்தவர்கள் கூட அவை அழிக்கப்படும் வரை காத்திருந்தனர்.

தொல்பொருள் தளங்களை என்ன செய்வது என்று அவர்கள் கேட்ட ஒரு காலம் இருந்தது. நினைவுச் சின்னங்கள் கொன்கிரீட் இடப்பட்டு மூடப்பட்டிருந்தன. அவை குறித்து புதிதாக கூற வேண்டியதில்லை. ஆனால் மக்கள் இவற்றை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். இவை எமது நாட்டின் மரபுரிமை. அவற்றை அழிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. இடமளிக்கவும் மாட்டோம்.

எமது ஜனாதிபதி தொல்பொருள் தளங்களை பாதுகாக்க இரவு பகலாக பாடுபடும் தலைவராவார். அவர் அவ்விடங்களுக்கு சென்று அவ்விடங்கள் அழிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதற்காக ஜனாதிபதி செயலணியொன்றையும் நிறுவியுள்ளார்.

எனவே இதில் இனம், மதம் என பேதங்களை ஏற்படுத்திக் கொள்ள கூடாது. தொல்பொருள் தளங்களை எவரேனும் அழிக்க முற்பட்டால் அவர்களுக்கு எதிராக தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அந்த தண்டனை போதுமானது அல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் அச்சட்டங்களை திருத்துவதற்கு எமக்கு முடியும்.

யுனெஸ்கோவினால் பெயரிடப்பட்ட 890 உலக பாரம்பரியங்களில் 7 எமது நாட்டின் மரபுரிமைகளாகும். சீகிரியா, அனுராதபுரம், பொலனறுவை, கண்டி, தம்புள்ளை, காலி கோட்டை ஆகிய ஆறு தொல்பொருள் தளங்களும் அதில் உள்ளடங்கும். சிங்கராஜவே ஏழாவதாகும்.

இன்று, தொல்பொருளியல் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் அடிப்படையில் மனித ரீதியாக வளர்ந்த அறிவியல் பாடமாக மாறியுள்ளது. எனவே, கடந்த காலத்திலிருந்து பெறப்பட்ட அறிவை  நிகழ்காலத்திற்காக பயன்படுத்துவது அவசியம்.

இறுதியாக, இலங்கையின் மரபுரிமை தொடர்பான புரிந்துணர்வுள்ள எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பு எங்களுக்கு உள்ளது. எனவே நீங்கள் அனைவரும் ஒன்றாகச் செய்து வரும் சிறந்த பணிகளுக்கு ஒரு அரசாங்கமாக நாங்கள் எங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றேன் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: