நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை மேலும் அதிகரித்துக் காணப்படும் – 3 ஆம் திகதி புயல் உருவாகும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Friday, December 1st, 2023
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் காணப்படுவதனால் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை மேலும் அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் பொலநறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தமான் கடல் பிராந்தியத்தின் தென் பகுதியுடனும் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்துடனும் இணைந்த கடல் பிராந்தியங்களுக்கு மேலாக நிலைகொண்டிருந்த தாழ் அமுக்க பிரதேசமானது மேற்கு ‐ வடமேற்குத் திசையை நோக்கி நகர்கின்றது.
இது மேலும் தீவிரமடைந்து அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதிற்கு மேலாக தாழ் அமுக்கமாக காணப்படும்.
இந்த தாழ் அமுக்கமானது மேலும் விருத்தியடைந்து சூறாவளியாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும்.
இதேவேளை இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் அபாயகரமானதாகவும் காணப்படும்.
ஆகையினால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் குறிப்பிட்ட இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை டிசம்பர். 3 ஆம் திகதி உருவாகும் புயல் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 4-ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்க வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


