நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான திட்டத்தை 24 மணிநேரத்தில் முன்வைக்க முடியுமா? – எதிரணிக்கு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் ஜோன்ஸ்டன்!

Sunday, November 14th, 2021

நாட்டின் பிரச்சினைகளை எப்படி தீர்க்கலாம் என்ற தீர்வை 24 மணி நேரத்தில் மக்களுக்கு முன்வைக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.

இன்று முழு உலகமும் நெருக்கடியில் உள்ளது. கோவிட் தொற்று நோயால் நம் நாடு மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளன. ஆனால் நமது அரசாங்கம் அந்த நெருக்கடியை நன்றாகவே கையாளுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை கண்டேன். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

இந்த பணவீக்கம் அதிகரிப்பு நம்மை மட்டும் பாதிக்கவில்லை. இன்று தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. இணையத்தை கொஞ்சம் பயன்படுத்தி பாருங்கள்.

நம் நாட்டில் தான் பிரச்சினைகள் இருப்பது போல் பொய்களை பரப்பாதீர்கள். நமது நாட்டில்தான் பணவீக்கம் அதிகம் என்று எதிர்க்கட்சிகள் காட்ட முயல்கின்றன.

கொரோனா தொற்று நோயால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. உலகில் பொருட்களின் உற்பத்தி குறைந்துள்ளது. தொழில்துறை வலையமைப்புக்கள் உலகளவில் சரிந்துள்ளன. பலதரப்பு மற்றும் இருதரப்பு உதவிகள் குறைந்துள்ளன.

இனியும் எமது நாட்டை பின்நோக்கி செல்ல இடமளிகக் முடியாது. அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர வேண்டியதும் அவசியமாகும். வீதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால்தான் நாடு வளர்ச்சி அடையும்.

எதற்காக வீதிகள் அமைக்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வினவுகின்றனர். நாட்டை அபிவிருத்தி செய்யத்தான் வீதிகள் அமைக்கப்படுகின்றன. இவை எதிர்காலத்திற்கான முதலீடுகள். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எங்களிடம் வீதிகள் நிர்மாணித்து தருமாறு கேட்கிறார்கள். அவர்களுக்கு வீதிகளின் மதிப்பு தெரியும். அவ்வாறு கேட்டவாறே வீதிகள் எதற்காக என்றும் வினவுகின்றனர்.

அத்துடன் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும் தலா 3 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு எம்பிக்களுக்கு 5 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு கட்சிகள் அன்றி மக்கள் சேவைதான் முக்கியம். சமுர்த்தி திட்டம் கிராம அபிவிருத்தி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

எம்பிகள் ஓய்வூதியம் பெற 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று இந்த பட்ஜெட்டில் முன்மொழிந்துள்ளோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் எரிபொருள் சலுகை குறைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி கட்டணம் 25% இனால் குறைக்கப்பட்டுள்ளது. அரசு செலவினங்களை குறைக்க நாம் முன்னுதாரணமாக திகழ்கிறோம்.

உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். கோவிட் தொற்றினால் அழிந்த பொருளாதாரத்தை சீர் செய்ய உலக நாடுகள் முயற்சிக்கின்றன. பொருட்களின் விலை உயர்வு தற்காலிகமானது.

தேவைக்கு ஏற்ப விநியோகம் இல்லாத போது, பொருட்களின் விலை உயரும், பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். மீண்டும் சந்தைக்கு பொருட்கள் வரும்போது, மீண்டும் விலை குறைகிறது. முழு உலகிலுமே நெருக்கடி ஏற்பட்டுள்ள சமயத்தில் எதிரணி தம்பட்டம் அடித்து வருகின்றன.

தம்பட்டம் அடிக்கும் நிலையில் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை தயாரித்திருப்பார்கள். அதனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருந்தால் அதனை. அதை மீட்டெடுப்பதற்கான வழியை மக்களுக்கு 24 மணி நேரத்தில் முன்வைக்குமாறு எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுகிறறேன். ஆனால்  எதிர்க்கட்சியிடம் எந்த திட்டமும் இல்லை என்பதுதான் உண்மையான விடயம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: