நாடுமுழுவதும் உள்ள சமுர்த்தி பயனாளர்களை தொழில் முனைவோராக மேம்படுத்துங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

Monday, March 15th, 2021

சமுர்த்தி பயனாளர்களை கடன்கள் மற்றும் நிதி உதவிகளில் மாத்திரம் தங்கி வாழ்வோராக அன்றி தொழில்முனைவோர்களாக சுயமாக முன்னேறக்கூடியவர்களாக மாற்றியமைப்பதற்கான முறையொன்று அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த கலந்துரையாடலின்போது சமுரத்தி கொடுப்பனவை பெறும், எனினும் அக்கொடுப்பனவு அவசியமற்றவர்களை நீக்குவதற்கு இதுவரை முறையான திட்டம் இல்லாத நிலையில், அவ்வாறான சமுர்த்தி பயனாளர்கள் வெளியேறும் போது அவர்களுக்கு 4 வீத சலுகை வட்டி விகிதத்தில் 5 இலட்சம் ரூபாய் கடன் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை எதிர்காலத்திலும் செயற்படுத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடு முழுவதும் 17 இலட்சத்து 62 ஆயிரத்து 655 குடும்பங்கள் சமுர்த்தி கொடுப்பனவை பெறும் அதேவேளை, அதற்காக அரசாங்கத்தினால் வருடாந்தம் 53 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது. இதற்கு மேலதிகமாக 25 ஆயிரம் சமுர்த்தி பெண் தொழில் முனைவோரை பலப்படுத்தும் வேலைத்திட்டம் 14 ஆயிரம்  கிராம சேவகர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

500 உற்பத்தி கிராமங்களை ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் செயற்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 50 கிராமங்களில் இதுவரை செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஊனமுற்றவர்கள் அடையாளங்காணப்பட்டு அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் மற்றும் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் இதன்போது அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலணி ஊடாக அனைத்து அமைச்சுக்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் ஆகியோரை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முறைப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாட்டில் அதிகரிக்கும் வெப்பம் - மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்!
நாட்டிற்கு கிடைக்கக்கூடிய உதவிகளை உடனடியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரி...
அரிசி நிர்ணய விலை தொடர்பில் இரண்டு வாரங்களில் 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளன – யாழ். மாவட்ட பாவனையாளர்...