நல்லூர் விபத்தில் படுகாயமடைந்தவர் பரிதாபமாக பலி – விபத்தை ஏற்படுத்தியவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை என மக்கள் விசனம்!

Wednesday, July 8th, 2020

நல்லூர் கோவில் வீதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் நேற்று மாலை உயிரிழந்தார்.

திருநெல்வேலியை சேர்ந்த சின்னத்துரை குகேந்திரன் (62) என்பவரே உயிரிழந்தவராவார்.

நல்லூர் வீதியால் சென்றுகொண்டிருந்த சொகுசு வாகனம் ஒன்று வீதிக்கு சமீபமாக நிறுத்தப்பட்டு திடீரென கதவு திறக்கப்பட்டதால், பின் பக்கமாக மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் வாகனக்கதவுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.

தலையில் பலத்த காயமடைந்த இவர் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பயனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்தார். சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

விபத்தால் மூளையில் ஏற்பட்ட பாரிய இரத்தக் கசிவினால் மரணம் ஏற்பட்டது என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விபத்தை ஏற்படுத்திய நபர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் சகோதரரான தி.பரமேஸ்வரன் என பொலிஸார் தெரிவித்திருந்த போதிலும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என தெரியவருகின்றது.

Related posts: