நல்லூரின் பாதுகாப்புக்கு  500 பொலிஸாருடன் 25 பாதுகாப்பு கமராக்கள்!

Wednesday, August 17th, 2016

ஆரம்பமாகியுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் காலப்பகுதியில் பக்தர்களின் பாதுகாப்புக்களை கருத்திற்கொண்டு, ஆலயச்சூழலில் 500 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 25 பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.

நல்லூர் ஆலய மஹோற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

‘நல்லூர் ஆலயத்திருவிழா 25 தினங்கள் இடம்பெறுகின்றன. இன்று (17) இடம்பெறவுள்ள மஞ்சத்திருவிழாவில் இருந்து விஷேட திழருவிழாக்கள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில், ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வருகைதரும் பக்தர்கள் தங்க ஆபரணங்கள் அணிந்து வருகின்றனர். இதனைக் களவாடிச்செல்வதற்காகவே சிலர் ஆலயத்துக்கு வருகை தருகின்றனர்’ என்றார்.

‘இவர்களிடம் இருந்து பக்தர்களை பாதுகாப்பதற்காக 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு 25 பாதுகாப்பு கண்காணிப்பு கமெராக்களும் ஆலய வெளிச்சூழலில் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு சந்தேகத்துக்கிடமான ஒரு கும்பல் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு இவ்வாறு குற்றச்செயல் புரியும் சிலரின் புகைப்படங்கள் பொலிஸாரிடம் உள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 3ஆம் திகதி வரையில் ஆலயச் சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டிருக்கும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts: