தொழிற்சங்கங்களுடன் இணக்கமாக செயற்படுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Thursday, February 25th, 2021

அரச சேவை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாது பாரிய சிக்கலாக மாறியுள்ள பல பிரச்சினைகள் உள்ளன.

சம்பளம் மற்றும் பதவி உயர்வு முரண்பாடுகள் ஆட்சேர்ப்பு நடைமுறையில் உள்ள சிக்கல்கள் அவற்றில் சிலவாகும். ஊழியர்களுக்காக இந்த பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

அந்தவகையில் எமது மக்கள் தற்போதைய அரசாங்கத்தை அதிக நம்பிக்கையுடன் ஆட்சிக்கு கொண்டு வந்தனர். நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு உதவுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தொழிலாளர்களுக்காக போராடி அவர்களின் கோரிக்கைகளை வென்ற ஒரு தலைவர் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, தனது அரசாங்கம் பின்பற்றுவதும் அதே கொள்கையாகும் என்றும், தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தான் எப்போதும் தயாராக உள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் அளித்த பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அரச சேவை வலுவானதாகவும், வினைத்திறனானதாகவும், மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தொழிற்சங்கங்களுக்கு செவிசாய்க்கவும் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி கோவிட் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொழிற்சங்கங்களை சந்தித்த்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அனைத்து வகையான அரச நிறுவன நிதிகளுக்கும் திறைசேரியில் தங்கியிருக்கும் நிலையை மாற்றி, அவற்றை செயற்திறன் வாய்ந்த மற்றும் இலாபகரமான நிறுவனங்களாக மாற்ற அரசாங்கத்திற்கு உதவுமாறும் ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்..

அதேபோன்று “நாங்கள் நாட்டின் முன்னால் உள்ள சவால்களின் பாரதூரம் பற்றி அறியாமல் நாட்டை பொறுப்பேற்கவில்லை. நாட்டின் மீது பெரும் கடன் சுமை சுமத்தப்பட்டிருந்தது.

பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. சவாலை எவ்வாறு வெற்றிகொள்வது என்பது பற்றிய ஒரு தொலைநோக்கு எங்களுக்கு இருந்தது. கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக முன்னேற்றத்திற்கு தடைகள் இருந்தபோதிலும், நாங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றோம்.

நாட்டின் ஏற்றுமதி வருவாய் கோவிட் காலத்திற்கு முந்தைய நிலைக்கு திரும்பியுள்ளது. தொற்றுநோயை எதிர்கொண்டு அரசாங்கம் பின்பற்றிய கொள்கை காரணமாக, விவசாயத் துறை வளர்ச்சியடைந்ததே அன்றி சரிவடையவில்லை.

நாட்டில் பயிரிடக்கூடிய அனைத்து பயிர்களையும் பயிரிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களின் நேர்மறையான பெறுபேறுகளை இப்போது நாம் காணலாம், ”என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: