அனைத்து மாவட்டத்தினரும் யாழில் பிறப்புச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்!

Wednesday, May 22nd, 2019

இலங்கையின் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ். மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

அத்துடன், விவாகப் பதிவு மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழை இதேபோன்று யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ். பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் அலுவலகத்தை (21) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னைய காலங்களில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் பெறும் நடவடிக்கைகள் யாழ்.மாவட்ட செயலகத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வந்தன. படிப்படியாக அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதன் பின்னர் பிரதேச செயலகங்களுக்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அதன்படி அவர்கள் அந்தந்த பிரதேச செயலக பிரிவுகளில் பிறந்தவர்கள் அந்தந்தப் பிரதேச செயலகங்களில் பிறப்பு பதிவுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்பின்னர், யாழ்.மாவட்டத்திலுள்ள எந்தெந்தப் பிரதேச செயலகத்தில் பிறந்தவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களையும் பெறக்கூடியதாக வசதிகள் செய்யப்பட்டன.

வடமாகாணத்தில் பிறந்தவர்கள் வடக்கில் எந்தப் பிரதேச செயலகத்திலும் பெறக்கூடிய ஏற்பாடுகள் முன்னரே இருந்திருந்தாலும், தற்போது, அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதன் அடிப்படையில், நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், யாழ்.மாவட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த செயற்திட்டம் எமது மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றது என்று யாழ்ப்பாணம் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

Related posts: