தொடர்ந்தும் நாளாந்தம் 3 ஆயிரத்தை தாண்டும் தொற்றாளர்கள் – கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பே அவசியம் என சுகாதார துறையினர் வலியுறுத்து!

Sunday, June 6th, 2021

நாட்டில் சில தினங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் அதிகமானதாக பதிவாகிவருவதால் குறித்த தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என சுகாதார தரப்பினர் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 3 ஆயிரத்து 103 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 3ஆயிரத்து 94 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளனர். 9 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடுதிரும்பியவர்களாவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 இலட்சத்து 2 ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 569 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 1,851 பேர் நேற்று (05) குணமடைந்தனர். இதற்கமைய, கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளதென தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம் கடந்த 24 மணிநேர பதிவுகளின் அடிப்படையில் கொரோனா வைரசினால் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதன்படி நேற்று ஒருவர் உயிரிழந்தார். மேலும் கடந்த 21 ஆம் திகதிமுதல் 4 ஆம் திகதிக்குள் 39 பேர் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளது எனவும் அரசாங்க தகவல் திணைக்களம தெரிவித்துள்ளது.

இதில் 23 ஆண்களும் 17 பெண்களும் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் 50 முதல் 99 வயதிற்குற்பட்டவர்கள் எனவும் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: