தேர்தல் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ் அரசியல் தரப்பினர் உதட்டளவில் பேசினாலும் உள்ளத்தில் பிரச்சினைகளை நீடிக்கச் செய்வதே எண்ணங்களாக உள்ளது – ஈபிடிபி ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!
Saturday, June 22nd, 2024
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வுகளை பெறுவதற்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ் அரசியல் தரப்பினர் உதட்டளவில் பேசினாலும் உள்ளத்தில் இப்பிரச்சினையை நீடிக்கச் செய்வதே இவர்களது எண்ணங்களாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (22.06.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கருடனான சந்திப்பில் மாறுபட்ட நிலைப்பாட்டையே தமிழ் அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இது தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டையாகவே இருக்கும்.
அத்துடன் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வுகளை பெறுவதற்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாய்ப்பின்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என உதட்டளவில் பேசினாலும் உள்ளத்தில் இப்பிரச்சினையை நீடிக்கச் செய்வதே இவர்களது எண்ணங்களாக உள்ளது.
இதேநேரம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்ற கருத்து நிலவும் சூழலில் அவ் வேட்பாளர்கள் அரசியலமைப்பில் உள்ள மாகாண முறைமையை முழுமையாக நடைமுறைப்படுத்த சமிக்ஞையை காட்ட முனைகின்ற போதும் தமிழ் தரப்பு அதனை புகழ்ந்து பேசுவது போன்று வெளிப்படுத்தினாலும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் முன்னிலையில் பிளவுபட்ட நிலையிலேயே கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்துள்ளனர்.
இது இந்தியாவின் பங்களிப்பை கோருவது போன்று காட்டிக்கொண்டாலும் எமது அரசியல் பிரச்சினை தொடர்பில் அவர்களிடத்தில் தீர்க்கமான பார்வை ஒன்றும் இல்லாததையே வெளிக்காட்டி நிற்கின்றது.
ஆயினும் நீண்டகாலமாக எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்திவருகின்ற 13 ஆவது அரசியலமைப்பின் மாகாண முறைமை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதனை ஆரம்பமாக வைத்து முழுமையாக செயற்படுத்த வேண்டும் என்பதே தற்போதுள்ள நிலைமையில் பொருத்தமாக அமையும்.
எனவே பிளவுபட்டுள்ள நிலையில் உள்ள நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் மக்களின் நலனிலிருந்து சிந்திக்க வேண்டும். கிடைக்கின்ற வாய்ப்புக்களை எமது மக்களின் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அத்துடன் அரசியல் அமைப்பில் இருக்கின்ற அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த இணக்கங்கள் கூறப்படுகின்ற நிலையில் இதய சுத்தியுடன் நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ் கட்சிகள் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவார்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


