தேர்தல் ஒத்திவைப்பால் சுமார் 3000 அரச பணியாளர்களுக்கு வேதனம் இல்லை – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Sunday, March 5th, 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 3000 க்கும் மேற்பட்ட அரச பணியாளருக்கு தம்மால் நிவாரணம் வழங்க முடியாது தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்திற்கு அமைவாக, எதிர்வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக, குறித்த அரச பணியாளர்கள் பணியிடங்களில் இருந்து சம்பளமில்லாத விடுமுறையை பெற்றுள்ளனர்.

எனினும், மார்ச் 9 ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடந்து கொண்டிருப்பதால் அவர்களை மீண்டும் பணிக்கு அழைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

இதனால் வேதனமல்லா விடுமுறையில் தேர்தலில் போட்டியிடும் இந்த வேட்பாளர்களில் பலர் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்.

இந்தநிலையில், மார்ச் 9 ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாத நிலையில், தேர்தல் நடைமுறைகள் நிறுத்தப்படவில்லை என்றும், தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த வேட்பாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது எனவும் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தால், இந்த ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கான அமைச்சரவை முன்மொழிவை சமர்ப்பிக்க பொது நிர்வாக அமைச்சுக்கு, ஆணைக்குழு பரிந்துரைக்கலாம்.

எனினும், நீதிமன்றம் அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மேலும் தேர்தல் செயற்பாடுகளை தொடரவேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, தமது ஆணைக்குழுவினால் அத்தகைய பரிந்துரையை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

இதேவேளை, பொது நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தலில் போட்டியிடும் எந்த அரச ஊழியர்களும் தேர்தல் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது முடிவடைந்ததாகவோ தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து அதிகாரபூர்வ தகவலை பெறும் வரை, பணிக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சினால் சட்டப்பூர்வமாக ஏற்க முடியாது என்றும் தேர்தல் பணிகள் நடந்து வருவதால், எவரும் எதுவும் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: