தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக புஞ்சிஹேவாவின் பெயர் பரிந்துரை!

Friday, November 20th, 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு நிமல் புஞ்சிஹேவாவையும் அதன் அங்கத்தவர்கள் பதவிக்கு ஓய்வுபெற்ற முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட், ஜீவன் தியாகராஜா, எஸ். சமாதிவாகர மற்றும் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.பி.பி. பத்திரண ஆகியோரது பெயர்களைப் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பரிந்துரைத்துள்ளார் என ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நிமல் புஞ்சிஹேவா தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் சட்டம் மற்றும் விசாரணைப்பிரிவின் மேலதிக ஆணையாளராக செயலாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கடந்த தேர்தல்களின் போதும் அதேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசகராகச் சேவையாற்றியிருந்தமை அசுட்டிக்காட்டத்தக்கது.

தமிழரான ஜீவன் தியாகராஜா 1984 ஆம் ஆண்டுமுதல் அரச சார்பற்ற அமைப்புக்களில் பணியாற்றி வருகின்றார். அத்துடன் அரச சார்பற்ற அமைப்புக்களின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் திகழ்கின்றார்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் தலைவர் உட்பட மூன்று அங்கத்தவர்கள் இருக்க முடியும்.

ஆனால், 20ஆவது திருத்தச் அசட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் தலைவர் உட்பட மொத்தமாக ஐவர் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட வேண்டும். இதில் ஒருவர் கட்டாயமாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆகக் குறைந்தது பிரதி ஆணையாளர் பதவியில் இருந்தவராக இருக்க வேண்டும்.

19ஆவது திருத்தத்தின் பின்னர் மீள் வடிவமைக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி நியமிக்கப்பட்ட தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அங்கத்தவர்களான ரட்ணஜீவன் ஹுல், என்.ஜே. அபேசேகர ஆகியோரது ஐந்தாண்டுகளுக்கான பதவிக்காலம் இம்மாதம் 12ஆம் திகதியோடு முடிவுக்கு வரவேண்டும் என்றாலும் இன்னமும் புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கான அங்கத்தவர்கள் நியமிக்கப்படாமையால் குழப்ப நிலை உள்ளது.

இதேவேளை, எல்லை நிர்ணயக் குழுவின் தலைவராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: