தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது -கலவரங்கள் நடத்துவதனால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எவராலும் முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, September 26th, 2022

கலவரத்தினை ஏற்படுத்தி, அதன் ஊடாக நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எவரேனும் முயற்சிப்பார்களாயின் அந்த முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு என்பது நாட்டு மக்களின் பாதுகாப்பாகும். அதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. எனவேதான், அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்  –

தேசிய சபை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து சபாநாயகர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வார்.

பொதுஜன பெரமுனவானது மக்கள் மத்தியில் கீழ் மட்டத்திலிருந்து ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ள கட்சியாகும்.

இது தொடர்பில் கட்சி மட்டத்திலும் , தேசிய சபையிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை எடுப்போம்.

ஏனைய கட்சிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்காமை அவரவரின் தனிப்பட்ட தீர்மானமாகும். இது தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடி அவர்கள் தீர்மானங்களை எடுப்பர் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: