தென்பகுதியை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல்: அதிரடி முடிவெடுத்த ஜனாதிபதி!
Tuesday, May 29th, 2018
நாட்டில் தற்போது அச்சுறுத்திவரும் நோய்த்தாக்கங்களுக்கு சிகிச்சை வழங்க நிதி ஒதுக்கீடுகளை தடையாகக் கருதாது நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி நேற்றையதினம் சுகாதார அமைச்சுக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி தென் மாகாணத்தில் வைரஸ் நோய் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காகவும் சிகிச்சைகளுக்காகவும் முன்னெடுக்கப்படும் துரித செயற்திட்டங்களைக் கேட்டறிந்தார்.
இதன்போது சிகிச்சைக்காக தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் தொடர்பில் குறைபாடுகள் நிலவுமாயின், கேள்வி பத்திர நடைமுறைகளுக்கு அப்பால் அவசர தேவையாகக் கருதி அவற்றைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க முடியுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மாகாண மருத்துவமனைகளில் சிகிச்சை நடவடிக்கைகளின் போது நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நிதி ஒதுக்கீடுகளை துரிதமாக மாகாண சபைகளுக்கு விடுவிக்குமாறும் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை, கடந்த மே மாதம் மாத்திரம் இன்புளுவென்சா மற்றும் எடினோ வைரஸ் தாக்கம் காரணமாக பலியான சிறார்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ள நிலையில் தற்போது தொடரும் காலநிலை சீரின்மையை காரணமாக மற்றுமொரு நோயான எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனால் நீருடனான அனர்த்த பகுதிகளில் நடமாடும்போது பாதணிகளை அணிந்துகொள்ள வேண்டும் என்று சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Related posts:
|
|
|


