தூத்துக்குடியில் வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

Tuesday, May 22nd, 2018

தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாநகரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை , தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 10 பேரில் ஒரு 17 வயது மாணவியொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை போராட்டக்காரர்கள் சிலர் உயிரிழந்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்  அங்கு நிறத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளிகளுல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த போராட்டத்துக்கு வியாபாரிகளும், பல்வேறு அமைப்புகளை ஆதரவளித்துள்ளன.

இதனால் இப்பகுதியில் உள்ள பல அங்காடிகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதியில் உள்ள மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், மேலும் இந்த கழிவுகளால் புற்றுநோய் வரக்கூடும் என கூறி அ.குமரெட்டியபுரம் கிராம மக்கள் கடந்த 99 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: