துல்லியமான தரவின்றி கொரோனாவை எதிர்த்துப் போராடுவது கடினம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, November 6th, 2020

பி.சி.ஆர் சோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் வெளியிடுவதற்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் வகுக்கும் வரை நாட்டில் கொவிட்-19 பரவலை எதிர்த்து சரியான தரவுகளை இணைப்பது கடினம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கிறது.

அத்துடன் இந்த முடிவுகளை வெளியிட இப்போது எடுக்கப்படும் 48 மணி நேர காலத்தை நம்ப முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் சரியான தரவு வெளியிடப்படும் வரை வைரஸை திறம்பட கட்டுப்படுத்துவதை எதிர்பார்க்க முடியாது என்றும் மருத்துவர் செனால் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

சீரற்ற (Random) பி.சி.ஆர் சோதனைகள் சிவப்பு வலயப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டும், மேலும் அந்தப் பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்குவது பற்றி சிந்திக்க முன் அத்தகைய பகுதிகளை பச்சை வலயங்களாக மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் சோதனை முடிவுகளை ஒரு நாளுக்குள் வெளியிடுவதற்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் வகுப்பது கட்டாயமானது அல்லது நாடு முழுவதும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது கடினம் என்று சங்கத்தின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் மருத்துவமனை ஒன்று தினசரி 2 பி.சி.ஆர் இயந்திரங்களுடன் 20,000 சோதனைகளை மேற்கொண்டதாகவும் அதேவேளை தேசிய மருத்துவமனைகளில் இதுபோன்ற 20 இயந்திரங்கள் இருந்தபோதிலும், ஒரு நாளைக்கு 7,000 முதல் 8,000 சோதனைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன என்றும் மருத்துவர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: