திருமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்கும் தீர்மானம் விரைவில் – பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!
Thursday, January 19th, 2017இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான தீர்மானம் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற “ரைசினா கலந்துரையாடல் 2017” மாநாட்டில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
உலகிலுள்ள மிகவும் ஆழ்கடல் துறைமுகமான திருகோணமலையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினால் பாரிய கடன்சுமை ஏற்பட்டதாலேயே அதனை சீன நிறுவனத்திடமே வழங்க வேண்டிய நிலை உருவானதாக சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளைக் கருத்தில் கொண்டே, இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். இது தனியே வர்த்தக நோக்கிலான திட்டம் மாத்திரமேயாகும் எனவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது எனக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் உணர்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் கூறியுள்ளார். திருகோணமலை துறைமுகத்தை இந்தியா மூலம் அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்ற நிலையில், ஹம்பாந்தோட்டையை சீனாவிற்கு வழங்குவது குறித்து இந்தியா கவலை கொள்ள வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலை துறைமுகத்தை கடற்படைத் தளமாகவும், வர்த்தக தளமாகவும் மாற்றுவதற்கு நாம் முயற்சிக்கிறோம்.” என்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|