தினமும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தொடருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிக்கின்றனர் – நடவடிக்கை எடுக்க தயாராகும் புகையிரத திணைக்களம்!

Sunday, July 2nd, 2023

இலங்கையில் தினமும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தொடருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால், நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நட்டத்தை தொடருந்து திணைக்களம் சுமக்க வேண்டியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக தொடருந்து பயணச்சீட்டு சோதனை பரவலாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

அலுவலக தொடருந்துகளில் பெரும்பாலானோர் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வதை அவதானித்துள்ளதாக பொது மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தொடருந்து பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களைத் தேடி கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர்.

அவ்வாறு சிக்கியவர்களிடம் 3000 ரூபாய் அபராதத்துடன் இரண்டு மடங்கு பயணக் கட்டணத்தை அறவிட்டதாக பொது மேலாளர் தெரிவித்தார்.

நாளொன்றுக்கு சுமார் நான்கு இலட்சம் பேர் தொடருந்து பயன்படுத்துவதாகவும், தொடருந்து திணைக்களத்திற்கு மாதாந்தம் ஆயிரம் கோடி ரூபா வருமானம் கிடைத்தாலும், மொத்த வருமானமும் எரிபொருள் செலவிற்கு மட்டுமே செலவிட வேண்டியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பேருந்து கட்டணத்தை விட 75 சதவீதத்தால் தொடருந்து பயணச்சீட்டு கட்டணத்தை அதிகரிக்க யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: