திங்கள்முதல் நாடளாவிய ரீதியில் தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு சட்டம் – பொலிஸ் தலைமையகம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பு!

Saturday, April 25th, 2020

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும் கண்டி மாவட்டத்தில் அலவாத்துகொடை பொலிஸ் பிரிவு , கேகாலை மாவட்டம் வராக்காபொல பொலிஸ் பிரிவு மற்றும் அம்பாறை மாவட்டம் அக்கரைபற்று பொலிஸ் பிரிவுகளில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை ஐந்து மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு 24.04.2020 இரவு 8 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு , களுத்துறை , கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

தளர்ததப்படும் ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பொது மக்கள் நடந்து கொள்ளும் விதத்தினை கருத்திற் கொண்டே ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையிவல் – ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்கி மக்கள் வாழ்க்கையை வழமைக்கு திரும்புவது எப்போது என பலர் கேள்வி எழுப்புகின்றார்கள். ஆனால் ஒரு சிலர் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமல் செயற்படுவதனால் முழு நாட்டிற்கும் ஆபத்தாகி விடும் சூழல் காணப்படுகின்றது.

இலங்கை முழுவதும் இன்றும் நாளையும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கின்றது. கடந்தவாரம் அபாயவலயமாக இனங்காணப்பட்ட 4 மாவட்டங்கள் மற்றும் சில பொலிஸ் பிரிவை தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.

எனினும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்றும் நாளையும் ஊரடங்கு சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்படுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை சிலர் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமல் செயற்பட்டமையினால் கடற்படை சிப்பாய்கள் உட்பட கொழும்பு 12 பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் இன்றுஅதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: