தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தின் வடகிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது – காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Sunday, December 3rd, 2023

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் இது மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற்றமடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அத்துடன் இது வடக்கு கடற்கரையை அண்மித்ததாக நாட்டை விட்டு நகரவுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சபரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் இடைக்கிடையே மழைப்பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் வடக்கு, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் குறித்த கடற்பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதேவேளை சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 221 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளனர். அத்துடன், அந்த பகுதிகளில் ஏழு வீடுகள் பகுதியவில் சேதமடைந்துள்ளன.

வெள்ளப்பெருக்கு மற்றும் கடும் காற்றினால் குறித்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைதீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று, ஒட்டுச்சுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

000

Related posts: