தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் ஆரம்பம் – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Friday, December 10th, 2021

தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகளுடன் இணங்கியொழுகாத நடவடிக்கைகளில், சில அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் ஈடுபடுகின்றமை தொடர்பான பல்வேறு முறைப்பாடுகளுக்குப் பதிலளிக்கும் முகமாக, மத்திய வங்கி அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் தளங்களில் தொடர்ச்சியான திடீர் பரிசோதனைகளை மேற்கொள்கின்றது.

இதன்மூலம் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பலப்படுத்தப்படும்.

2021 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனைகளின்போது, சில அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள், 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணிப்புரைகளுடன் இணங்கியொழுகாமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, நிதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் தொடர்புடைய பணிப்புரைகளுடன் இணங்கியொழுகுவதற்கு அவர்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தவறிழைக்கும் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் அறிவித்தலின் மூலம் தொடர்பூட்டப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்யத் தவறும் சந்தர்ப்பத்தில், அத்தகைய அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த மற்றும் மீளப்பெற மத்திய வங்கி நிர்ப்பந்திக்கப்படும்.

அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்களுக்கு வங்கிகளால் வழங்கப்பட்ட வீதங்களைவிட, உயர்ந்த வீதங்களிற்கு வெளிநாட்டுச் செலாவணியைக் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு அத்தகைய நாணயமாற்றுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் பொது மக்களுக்கு அறிவிக்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: