தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையில் இருக்கும் தொடர்புகளை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது தொடர்பில் இந்தியா ஆராய்வு – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!

Friday, February 16th, 2024

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் இருக்கின்ற தொடர்புகளை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை இந்தியா ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் ‘இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட கடற்றொழில் சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா அவரது துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார், நானாட்டான்,முசலி, மாந்தை மேற்கு ஆகிய 4 கடற்றொழில் சமாசங்களுக்கு குறித்த குளிர்சாதன பெட்டிகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தின் முதல் விஜயமாக இந்த விஜயம் அமைந்துள்ளது. இங்கு என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. என்ன தேவைகள் உள்ளது என்பதை அறிந்துள்ளேன்.

2010 இல் இருந்து இங்கு நடைமுறைப்படுத்தியுள்ள உள்ள பல்வேறு திட்டங்களையும் என்னால் நினைவு கூற முடிகிறது.

இலங்கை மக்களுக்கு நாங்கள் எவ்வாறு உதவி செய்துள்ளோம். அவை சமுதாய நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதே போன்றே கடற்றொழில் சமூகமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

இதற்கமைய மன்னாரிற்கு அதிகம் சுற்றுலா பயணிகள் வருகை தருவதை பார்க்க கூடியதாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து வருகை தரும் மக்களினால் இங்கு அபிவிருத்தி மாத்திரமின்றி தொடர்புகள் ஊடாகவும் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை பார்க்க முடிகிறது.

இந்நிலையில், அரச அதிபர் கூறியது போல் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் இருக்கின்ற தொடர்புகளை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறோம்.

அதற்கு தேவையான விடயங்களை முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக கடற்றொழில் சமூகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப மற்றும் இந்தியாவில் இருந்து கொண்டு வர வேண்டியவை தொடர்பாகவும் ஆராய்ந்து வருகிறோம்.

சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில்நுட்பக் குழு ஒன்று வருகை தந்திருந்தனர். இங்கு இறால் மற்றும் நண்டு வளர்ப்பது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான உற்கட்டமைப்பு என்பவை தொடர்பாகவும் வேளைத்திட்டங்கள் இடம் பெற்று வருகிறது.” என்றும்அவர் தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: