தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள் மேலும் 15 நாட்களுக்கு நீடிப்பு – ஒமிக்ரான் பரவாது என்ற உத்தரவாதமும் வழங்க முடியாது – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிப்பு!
Wednesday, December 15th, 2021தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டல்களை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை ஒமிக்ரான் வைரஸ் இலங்கையில் பரவாது என்ற உத்தரவாதத்தை எம்மால் வழங்க முடியாது. எனவே, அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்..
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஒமிக்ரான் புறழ்வு உலகெங்கிலும் வேகமாக பரவிவருகின்றது. குறித்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், இலங்கையில் பரவாது என்ற நூறு வீத உத்தரவாதத்தை எம்மால் வழங்கமுடியாது.
எனவே, அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதிலிருந்து தமது உயிரை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனில் மூன்றாவது தடுப்பூசியை பெறவேண்டியது கட்டாயம்.
அவ்வாறு பெறுவதன்மூலம் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதுடன், சமூகத்தில் பரவுக் விகிதத்தையும் குறைத்துக்கொள்ளலாம்.
ஏனெனில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், வெளியேறும் வைரஸ் அளவு குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே
இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டதன் பின்னர் தொற்று உறுதியானர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இரு தடுப்பூசிகளையும் பெற்று தொற்று உறுதியானவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசி பெற்ற திகதியிலிருந்து 6 மாதங்களின் பின்னர், மூன்றாவது தடுப்பூசியை வழங்குமாறு தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.
இது இவ்வாறிருக்க கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 335 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்த 46 ஆயிரத்த 103 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|