தரநிலைக்கு அமைய எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனம் உறுதியளிப்பு!

Wednesday, December 15th, 2021

எதிர்காலத்தில் எரிவாயு விநியோகத்தில் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் SLSI தரநிலைக்கு அமைய எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

அத்துடன், எரிவாயு கொள்கலனின் தரத்தை உறுதி செய்யும் ஸ்டிக்கர்களும் அவற்றில் ஒட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று மீள அழைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு கொள்கலன்களை மீளப்பெறுமாறு சிவில் செயற்பாட்டாளரான நாகாநந்த கொடிதுவக்குவினால் முன்வைக்கப்பட்ட மனு நேற்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, எரிவாயு கொள்கலன்களின் உள்ளடக்கங்களின் செறிமானத்தை காட்சிப்படுத்தக்கூடிய இயலுமை தொடர்பில் நீதியரசர்கள் ஆயம் வினவியிருந்தது.

இந்நிலையில், லிட்ரோ நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைய, இன்று மேற்படி விடயம் தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்க இன்றுவரை லிட்ரோ நிறுவனத்துக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: