தமிழ் மக்களின் மத, கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு முன்னெடுக்கப்படமாட்டாது – இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவிப்பு!

Wednesday, January 20th, 2021

தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என தேசிய மரபுரிமைகள், கலைகலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

முல்லைத்தீவு பிரதேசத்தில் குருந்தூர் மற்றும் மணலாறு படலைகல்லு பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இச்சம்பவத்தை கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாச்சார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. குறித்த பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களிலும் வரலாற்று சின்னங்கள், புதைந்துள்ளன. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு. இவ்விடயத்தில் இனம், மதம் ஆகிய காரணிகளை கொண்டு செயற்பட முடியாது.

எதிர்கால சந்ததியினருக்காக தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய மரபுரிமைகள் தொடர்பில் பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது எமது நோக்கமல்ல. அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை கொண்டு காணி அபகரிப்பு இடம்பெறுவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும் என தெரிவித்துள்ள இராஜாஙக அமைச்சர் அரசியல் நோக்கங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள். ஆகவே குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: