தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை – டி.எம்.சுவாமிநாதன்

Wednesday, May 11th, 2016

இலங்கை சிறைச்சாலை கட்டமைப்பை மேலும் மனிதாபிமானத்துடன் கூடியதாக மாற்றியமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள, மூன்றாவது ஆசிய பசுபிக் பிராந்திய சீர்திருத்த முகாமையாளர்கள் மாநாடு கொழும்பில் நேற்று  செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியது.

இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்த உரையாற்றுகையில், ஸ்ரீலங்காவின் மிகப்பெரிய சிறைச்சாலையான வெலிக்கடையை வேறு ஒரு இடத்தில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையை கட்டுப்படுத்த பொலிஸ் மோப்பநாய் பிரிவு ஒன்றை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நீர் மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செஞசிலுவை சங்கத்தின் உதவியுடன் சிறைச்சாலைகளில் ஏற்படுத்தவுள்ளதோடு, சிறைச்சாலைகளின் தரத்தினை சர்வதேசத்தின்  நியமங்களுக்கு அமைய பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது உள்ளிட்ட கைதிகளின் நலன்களை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: