தமிழரசு கட்சி உறுப்பினர் அடாவடி – வெல்லாவெளியில் இரண்டரை வயது குழந்தை வைத்தியசாலையில்!

Friday, April 28th, 2023

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் அவரது இரண்டரை வயது மகள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் போரதீவுப்பற்று இணைப்பாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்..

வெல்லாவெளி பகுதியில் உள்ள பாடசாலைக்கு முன்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு  உறுப்பினர் மற்றும் பிள்ளை, மனைவி மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் போது வழிமறித்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த செயற்குழு  உறுப்பினரின் இரண்டரை வயது பிள்ளை படுகாயமடைந்த நிலையில் மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.

இது தொடர்பில் தாக்குதல் நடாத்தியதாக தெரிவிக்கப்படும் தமிழரசு கட்சியின் போரதீவுப்பற்று இணைப்பாளர் வெல்லாவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

25-04-2023 வடகிழக்கில் இடம் பெற்ற ஹர்த்தால் நாளில் இவர் தனது  வர்த்தக நிலையத்தினை திறந்து வைத்திருந்ததாக தெரிவித்து முகப்புத்தகத்தில் இடப்பட்டிருந்த பதிவு ஒன்று தொடர்பிலேயே இவர் குறித்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

Related posts: