தபால் வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டதால் மனு பரிசீலனைக்கு அவசரமில்லை – சட்டத்தரணி தெரிவிப்பு!

Monday, February 20th, 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிடக் கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, எதிர்வரும் 23 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று திங்கட்கிழமை (20) நீதியரசர்களான எஸ்.துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டபோது, இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், தபால் மூலம் வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, 23 ஆம் திகதிக்கு முன்னதாக மனுவை பரிசீனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரி, மனுதாரர் தரப்பில் உயர் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்தார்.

அதன்படி, மனு இன்று அழைக்கப்பட்டபோது, இந்த வழக்கில் பிரதிவாதி தரப்பான தேசிய தேர்தல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், எதிர்வரும் 23ஆம் திகதி திட்டமிட்டபடி தபால் மூல வாக்களிப்பு இடம்பெறாததால், குறித்த வழக்கை முன்னர் திட்டமிட்டபடி அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில், மனுதாரர் தரப்பில் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கப்படாததால், இந்த வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதியன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.

Related posts: