தபால் மூல வாக்களிப்பை தாமதப்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை – ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, February 14th, 2023

தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, தபால் மூல வாக்களிப்பை தாமதப்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து பேசுவதற்காக, தேர்தலில் களமிறங்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தின் பின்னர் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படுமா இல்லையா என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கு தடையாக நிதிமன்ற உத்தரவு வழங்கப்படாவிட்டால் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படமாட்டாது என அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நிலை காரணமாக தேர்தலுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், தேர்தலை நடத்தவிடாமல் தடுக்க அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: