தனியார் ஊழியர்களுக்கும் சலுகை இழப்பீட்டுச் சட்டத்தில் திருத்தம் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Friday, March 11th, 2022

அரசாங்க ஊழியர்களைப் போன்றே தனியார்த்துறை ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்கும் வகையில் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அரச உத்தியோகத்தர் ஒருவர் பணிக்கு வரும் போது மற்றும் பணி முடிந்து வீடு திரும்பும் போது ஏற்படும் விபத்துக்களுக்காக வழங்கப்படும் இழப்பீடு, தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கும் வகையில் ஊழியர் கட்டளைச் சட்டத்தின் சரத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல், பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஏற்படும் விபத்துக்களுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 5 இலட்சம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் வேலையாட்கள் நஷ்டஈடு திருத்தச் சட்டமூலத்தை நேற்று சமர்ப்பித்து உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொழில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

தோட்டத் தொழிலாளர்கள் பணியிடத்தில் அனர்த்தத்துக்கு உட்பட்டால் நஷ்ட ஈடு கிடைக்கும் வகையில் வேலையாட்கள் நஷ்டஈடு திருத்தச் சட்டமூலம் திருத்தப்பட்டுள்ளது.

அது தவிர தனியார் துறை ஊழியர்கள் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தால் வழங்கப்படும் நஷ்ட ஈட்டுத் தொகை 16 வருடங்களின் பின்னர் இந்த சட்டத்தின் வாயிலாக அதிகரிக்கப்படுவதா தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

வேலையாட்கள் நஷ்டஈடு திருத்தச் சட்டமூலத்தை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது.

வேலையாட்கள் நஷ்டஈடு திருத்தச் சட்டமூலத்தை திருத்த இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுகிறது. கடமையில் ஈடுபட்டிருக்கையில் அனர்த்தத்துக்கு முகம் கொடுத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நஷ்ட ஈடு வழங்கும் சட்டம் 08 தசாப்தங்குளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டது.

2005 இல் இந்த சட்டம் திருத்தப்பட்டு நஷ்ட ஈட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டது. கடந்த 16 வருடங்களாக இந்த தொகை அதிகரிக்கப்படவில்லை. சம்பள தொகை அதிகரித்துள்ளது.

வேலையாட்கள் நஷ்டஈடு திருத்தச் சட்டமூலத்தை திருத்துவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதன் பிரகாரம் இந்த திருத்தம் தொடர்பில் தொழிற்சங்கங்களுடனும் முதலாளிமார்களுடனும் கலந்துரையாடினேன்.

தோட்டத் தொழிலாளர் ஒருவரை பாம்பு கடித்தால் நஷ்ட ஈடு கிடைக்காது. வேலைத்தளத்திலிருந்து வீட்டுக்கு வருகையிலோ தொழிலுக்கு வருகையிலே அனர்த்தம் நடந்தால் நஷ்ட ஈடு கிடைக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களை போன்றே தனியார் ஊழியர்களுக்கும் நஷ்டஈடு கிடைக்க இந்த திருத்தங்கள் வழிவகுக்கும்.

ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதியத்தை வழங்காவிட்டின் 50 வீத அபராதம் விதிக்கப்படுகிறது. பணத்தை வழங்குவதை தாமதித்தால் 05 முதல் 30 வீத அபராதம் விதிக்க புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அபராதம் ஊழியர்களுக்கு கிடைக்கும். ஊழியர்களின் நலனுக்காக இந்த திருத்தங்கள் செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது..

Related posts: