தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நீக்கப்படலாம் – நாளை இறுதி முடிவு எட்டப்படும் என சுகாதார அமைச்சர் நம்பிக்கை!

Thursday, August 26th, 2021

தற்போது நாடு முழுவதிலும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நீக்கப்படலாம் என்று தாம் நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டை முழுமையாக மூடிவைத்து கோவிட் தொற்றை கட்டுப்படுத்திவிட முடியாதென்கின்ற நிலைப்பாட்டில் உலக நாடுகள் இருப்பதாகவும், அதனையே தாங்களும் ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடந்த 20 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அமுலில் உள்ள போதிலும், சில இடங்களில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன் ஊரடங்குச் சட்டத்தை மீறுகின்ற வகையிலான நடவடிக்கை இடம்பெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்த இறுதி முடிவு நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசிய கோவிட் செயலணி நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்  அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: