தட்டம்மை உலகளாவிய தொற்றுநோயாக பரவும் அபாயம் – தொற்றுநோயோயல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே எச்சரிக்கை!

Friday, December 29th, 2023

தட்டம்மை உலகளாவிய தொற்றுநோயாக பரவும் அபாயம் இருப்பதாக தொற்றுநோயோயல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். தட்டம்மை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கடந்த மே மாதம் முதல் 700 இற்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களில் 42 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கம்பஹா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவானோர் பதிவாகியுள்ள நிலையில், களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, குருநாகல் மாவட்டங்களிலும் தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தட்டம்மை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பிறந்த குழந்தைகளை இலக்காக கொண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை சுகாதார மேம்பாட்டு பணியகம் பரிந்துரைத்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை போன்ற அதிக ஆபத்துல்லா மாவட்டங்களில் இந்த அவசரநிலை வலியுறுத்தப்படுகிறது

அடையாளம் காணப்பட்ட ஆபத்து அதிகமுள்ள பிரதேசங்களில் தட்டம்மை நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி முதல் 6 தொடக்கம் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகள் குறித்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி முதல் முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையான காலப்பகுதியில் அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்துவதனை உறுதிப்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் வலியுறுத்தியுள்ளது.

தட்டம்மை என்பது மோர்பில்லி வைரஸ் (Morbillivirus) இனத்தைச் சேர்ந்த பாராமிக்ஸோவைரடை (Paramyxoviridae) எனும் வைரஸால் ஏற்படும் தோற்று நோயாக கருதப்படுகிறது.

சுவாசக்குழாய் வழியாக உள்ளீர்க்கப்படும் வைரஸ் உட்கொள்ளப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நோய் அறிகுறிகளை ஏற்படுத்துவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இதன் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், குளிர் மற்றும் கண் சிவத்தல் என்பன பார்க்கப்படுகின்றன.

2019 ஆம் ஆண்டு அம்மை நோயை முற்றாக இல்லாதொழிக்க நாடாக இலங்கை பதிவு செய்யப்பட்டது. தெற்காசியாவில் அம்மை நோயை இல்லாதொழித்த ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒன்று.

இருப்பினும், நான்கு வருடங்களின் பின்னர் இலங்கையில் தட்டம்மை நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் மீண்டும் பதிவாகும் அம்மை நோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனமும் அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: