டிசம்பர் 01 – சர்வதேச எயிட்ஸ் தினம் இன்று!

Friday, December 1st, 2023

சர்வதேச எயிட்ஸ் தினம் இன்றாகும். 1981 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் முதல் எயிட்ஸ் நோயாளி ஒருவர் கண்டறியப்பட்டார்.

இது தற்போது வரை உலகில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நோயாக காணப்படுகின்றது.

உலகளவில் 39 மில்லியன் பேர் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டில் மாத்திரம் 1.3 மில்லியன் பேர் புதிய நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அதேநேரம் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எயிட்ஸ் நோயினால் சர்வதேச ரீதியில் இறந்துள்ளனர்.

இந்தநிலையில், எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், எயிட்ஸ் நோயை தடுக்க சமூகத்தை வலுப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனிடையே இலங்கையில் கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு 48 சதவீதத்தினால் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பல நோயாளர்கள் சமூகத்தில் உள்ள நிலையில், அவர்கள் அதற்கான சிகிச்சையை பெறுவதில் இருந்து விலகியிருப்பதால் நோயாளர் எண்ணிக்கையை மதிப்பிடுவதில் பாரிய சிக்கல் காணப்படுவதாக அந்த அமைச்சின் பாலியல் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜானகி விதான பத்திரன தெரிவித்தார்.

சமூகத்தில் கண்டறியப்பட்ட நோயாளர்களுக்கு, உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பான பாலியல் செயற்பாடுகளின் மூலம் எயிட்ஸ் நோயிலிருந்து தங்களையும், சமூகத்தையும் பாதுகாக்க முடியும் என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜானகி விதான பத்திரன தெரிவித்துள்ளார்.

000

Related posts: