ஞாயிறு மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடை – கிழக்கு மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை!

Monday, October 23rd, 2023

கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஞாயிறு தினங்களில் அறநெறிக் கல்வியில் ஈடுபடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லாத வகையில் தனியார் உதவி வகுப்புகள் அமைந்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சட்டத்தரணி எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் 02.00 மணி வரையிலும், போயா தினங்களிலும் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஆராய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உதவியை நாடுமாறு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, கந்தளாய், அம்பாறை, மஹாஓயா மற்றும் தெஹியத்தகண்டி ஆகிய பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: