ஜூலை மாதம் 27 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை – கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பு

Friday, July 24th, 2020

க.பொ.த.சாதாரண தரம்  மற்றும் உயர்தர மாணவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய காலை 7.30  மணிக்கு திறக்கப்படும் பாடசாலை மாலை 3.30 மணியளவில்  மூடப்படுமெனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய மாணவர்களுக்கு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே கல்வி செயற்பாடுகள், சுகாதார அதிகாரிகளினால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் கல்வியமைச்சு  வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு பாடசாலைகளை தயார்ப்படுத்தும்போது பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு கல்வியமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: